எரிமலைகள்
ஏதாவது சொல்லுங்கள்..
இனிமேலாவது பேசுங்கள்..
மௌனமாய் இருப்பவர்களே!
சரியென்றோ
தவறென்றோ
ஏதாவது சொல்லுங்கள்..
இனிமேலாவது பேசுங்கள்..
தவறென்றால் தடுத்திடுங்கள்
தலையில் விழும் குண்டுகளை
சரியென்றால் சொல்லிடுங்கள்
சமர்க்களத்தில் சந்திக்கின்றோம்
பயங்கரவாதப் போரில்
பாலர்களும் பெண்களும்
எப்படிச் சாகிறார்கள் என்று
எங்களுக்கு விளக்குங்கள்!
மருத்துவ மனைகளெல்லாம்
மரணத்தில் மிதப்பது
ஏன் என்று மட்டும்
எங்களுக்கு விளக்குங்கள்!
காணாமல் போனோர் கணக்கெல்லாம்
மிகச் சரியாய்
புதைகுழி எலும்புகளாய்
புகுந்து கொண்டது எப்படி
காரணம் சொல்லுங்கள்!
ஒரு சந்தேகம்!?
இந்தக் கற்பழிப்புகள்
உங்கள் வீட்டில் நடந்தாலும்
இப்படித்தான் இருப்பீர்களா
கண்டு கொள்ளாமல்..
உரிமை கேட்பது அப்படியென்ன
பெரிய தவறா
ஊமையாய் நிற்பதுதான்
உங்கள் நிலையா
அப்படி உங்களுக்கு சிங்களர்
என்னதான் தருகிறார்கள்?
எல்லாம் தெரிந்திருந்தும்
ஏன் இன்னும்
இறுக்கமாய் இருக்கிறீர்கள்!
இறையாண்மை என்றாலே
உங்கள் மொழியில்
இன அழிப்பு மட்டும் தானா
உலகம் ஒருநாள் அழியும்
நாங்கள் மட்டும் உடனே அழிவதில்
உங்களுக்கென்ன ஆனந்தம் ?
எல்லோரையும் கொன்றுவிட்டு
யாருடன்தான் பேசப் போகிறீர்கள்?
நாற்புறமும் கடலென்று
நம்பியிருந்தோம் நாங்கள்..
இப்போதுதான் தெரிகிறது
எங்களைச்சுற்றி
எல்லாப் பக்கமும் நீங்கள்தான்..
தனிமைத் தீவாய்
தமிழினம் மட்டும்தான்..
எங்களுக்கு மட்டும் எப்படி
எல்லோரும் எதிரிகள்!
எண்ணில்லா துரோகிகள்!
நிறுத்திக் கொள்ளுங்கள் நீரோக்களே
நியாயம் உங்கள் மீதும் திரும்பும்..
உங்கள் பாதங்களுக்குக் கீழும் அதே
எரிமலைகள் தான்.
உன்மத்தர்களே..
உங்கள் எதிரேயே
பிள்ளைகள்
உயிரோடு எரிந்து பார்த்ததுண்டா?
இல்லையென்றால்
பார்த்துக் கொள்ளுங்கள்..
கூடவே எண்ணிக்கையையும் குறித்து
வைத்துக் கொள்ளுங்கள்..
நாளை
எல்லாவற்றிற்கும் பதிலை
வட்டியுடன் சேர்த்து
வரவு வைக்க
வேண்டியிருக்கும்.