( நியூட்ரினோ ஆய்வகம் – ஒரு அலசல் )
தமிழ்நாட்டைச் சூறாவளியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் பல பிரச்சனைகளில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது இந்த நியூட்ரினோ ஆய்வகப் பிரச்சனை.
ஏற்கனவே காவிரியாறு, பாலாறு, முல்லைப் பெரியாறு, கூடங்குளம், ஆறுமுகநேரி, ஸ்டெர்லைட், ஒகேனக்கல், ஈழத்தமிழர் வாழ்வுரிமை, அகதிகள் முகாம் கொடுமைகள், இராமேசுவரம் மீனவர் பிரச்சனை, மீனவர் உரிமைச்சட்ட எதிர்ப்பு, மலட்டு கத்திரி எதிர்ப்பு, என பல போராட்டங்களை வாழ்வுரிமைக்காக நடத்த வேண்டிய நிலையில் உள்ள தமிழர்களுக்கு புதிய வரவாக வந்து சேர்ந்திருக்கிறது இந்த
நியூட்ரினோ ஆய்வக எதிர்ப்பு.
ஒருபுறம் அறிவாளிகள் இந்த ஆய்வகத்தால் எந்தத் துன்பமும் ஏற்படாது என்று கூவிக்கொண்டிருக்க மறுபுறம் அப்பாவிகளான ஏழை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த ஆய்வகத்தை வர விட மாட்டோம் என்று கொடி உயர்த்த, கடைசியாக எதிர்ப்புப் போராட்டம் நடத்திய 12 பேரை தேவாரத்தில் கைது செய்திருக்கிறது அரசு.
என்ன நடக்கிறது தேவாரத்தில்.? நியூட்ரினோ ஆய்வகம் அமைவதில் என்ன பிரச்சனை?
தேவாரம் … மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய ஊர். வனப்பகுதிகளாலும், சுருளியாறு மற்றும் சுருளி அருவி, போடி நாயக்கனூர், கம்பம் அருகில் முற்றிலும் விவசாயத்தை சார்ந்து வாழும் மலைப்பாங்கான , ஏலம், கிராம்பு, தேயிலை, காப்பி முதலான பயிர்களின் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கக் கூடிய பகுதி.
இந்தப் பகுதியில் ஒரு மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கலாம் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில் அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் அரசும் முடிவு செய்ததிலிருந்து இந்தப் பிரச்சனை தொடங்குகிறது. இந்த ஆய்வகம் தேவாரம் பகுதியின் சுற்றுச் சூழலைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும் என அப்பகுதி வாழ் மக்களும் சுற்றுச் சூழல்
ஆர்வலர்களும் குற்றம் சாட்ட, இல்லவே இல்லை, அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்று ஆராய்ச்சியாளர்களும், அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகளும் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்யாத குறையாக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் நியூட்ரினோ என்றால் என்ன?
இதற்கு விளக்கம் சொல்ல அறிவியல் தெரியாதோர்க்கும் புரியும் வண்ணம் அடிப்படையிலிருந்தே வருவோம்.
இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் ( matters ) அணுக்கள் எனப்படும் மிகச் சிறிய துகள்களால் ஆனவை.
ஒரு பொருளை சிறியதாக பகுத்துக் கொண்டே போனால் அதற்கு மேல் ( உடைத்து ) பகுக்க முடியாததே அணுவாகும். இது 19 ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் அணுக்கொள்கை. ஆனால் அதற்குப் பின் ரூதர் போர்டு போன்ற அறிவியலாளர்கள் அணுவையும் பகுக்க முடியும் என்றும், அந்த அணு வெளிப்புறம் எலக்ட்ரான்( – ) என்ற துகளாலும் உட்கருவில் புரோட்டான்(+) மற்றும் நியூட்ரான் என்ற துகளாலும் ஆனது எனக்
கண்டறிந்தனர்.
பின்னர் வந்த அறிவியலாளர்கள் இந்த அணுக்களைப் பிளப்பதன் மூலமோ அல்லது இணைப்பதின் மூலமோ மாபெரும் சக்தி உண்டாகிறது எனக் கண்டறிந்தனர் அந்த சக்தி எக்ஸ்ரே, புற்று நோயை குணப்படுத்த உதவும் கதிர்கள், அணு மின் தயாரிப்பு முதலிய ஆக்க வேலைகளுக்கும், அணு குண்டு, நியூட்ரான் குண்டு முதலிய அழிவு வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.
1930 ம் ஆண்டு உல்ப் கேங் என்ற அறிவியலாளர் அணுவில் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என்ற துகள்கள் மட்டுமல்ல இது தவிர வேறு சில துகள்களும் இருக்கலாம் என ஊகித்தறிந்தார்.
இத்தகைய துகள்களுக்கு நியூட்ரினோ எனப் பெயரிடப்பட்டது. பெயரிடப் பட்ட 26 ஆண்டுகள் கழித்து 1956 ல் நியூட்ரினோ துகள் உண்மையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதன் பின் நியூட்ரினோ அறிவியலில் புதிய ஆராய்ச்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நியூட்ரினோ துகளின் வேகம் ஒளியின் வேகத்தை ஒத்திருப்பதாலும் இதன் எடை மிகக் குறைவாகவும், இதன் வினையாற்றல் திறன் ( recating character ) மிகவும் குறைவாக இருப்பதாலும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாக ஊடுருவிச் செல்லும் என்று கண்டறியப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் பூமியின் ஒருபுறம் ஊடுருவும் இந்த நியூட்ரினோ துகள் எந்தப் பாதிப்புமின்றி மறுபுறம்
வெளிவரத் தக்கது என்பதுவும் கண்டறியப்பட்டது.
இத்தகைய சிறப்புத் தன்மைகள் கொண்ட நியூட்ரினோ துகளை மனித சக்திக்குள் வசப்படுத்த முடியுமா? என்ற நோக்கத்தில் குறைந்தபட்சம் அவைகளைக் கண்டுணர்ந்து, அவற்றின் பண்புகளை ஆராய முடியுமா என்ற ஆய்வுகளே தற்போது உலகெங்கும் நடந்து வருகின்றன. இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி இதுவரை மனித குலத்திற்கு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
இத்தகைய ஒரு ஆய்வுக் கூடம் தான் தேவாரம் பகுதியில் அமைப்பதற்கான ஏற்பாட்டில் இருக்கிறது அரசு.. அங்கு சூரிய ஒளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள், அணுக்களைப் பிளந்து அதிலிருந்து வரக் கூடிய நியூட்ரினோ துகள்களை பூமிக்கடியில் உள்ள மின் காந்த ஏற்பிகள் மூலம் கண்டறிவதே இந்த ஆய்வகத்தின் செயல்பாடு.
சரி அதிலென்ன பிரச்சனை? ஆய்வகம் அமைக்கப்படுவதிலோ, ஆராய்சிகள் நடப்பதிலோ யாருக்கும் எதிர்க்கருத்து இல்லை. ஆனால் அந்த ஆராய்ச்சிக்கூடம் பூமியின் மேற்தட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தான் பிரச்சனை உருவாகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க தேவாரம் பகுதியில் உள்ள மலையைக் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு
குடைந்து ஒரு சுரங்கம் ஏற்படுத்தி அதற்குள் இதற்கான கருவிகளை அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழு INO ( India based neutrino observatory) தயாரித்துள்ள வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் Indian based neutrino observatory FAQ MINO, www.imsc.ves.in/ ino/ Faq/ ino.info.pdf.)
இவ்வாறு மலையைக் குடைந்து சுரங்கம் உருவாக்கி அதில் ஆய்வுக்கூடம் அமைத்தல் என்ற திட்டம் வடக்கே இமயமலையில் டார் ஜிலிங், மனாலி ரோத்தால் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்டு பின் நீலகிரிக்கு தள்ளப்பட்டு அங்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்குப் பின் சுருளிக்கு விரட்டப்பட்டு அங்கும் வனத்துறை எதிர்ப்புக்குப் பின் தேவாரம் பகுதிக்கு
தள்ளப்பட்டுள்ளது.
1965 ல் இம்மாதிரியான ஆய்வுகள் கோலார் தங்கவயலில் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கத்தில் வைத்து நடத்தப்பட்டன. பின் சுரங்கம் மூடப்பட்ட பின் அப்படியே நின்று போய் விட்டன. (Project report - www.imsc.ves.in/ ino Open report - intenim report pdf) உலகில் இது போன்ற ஆய்வுக்கூடங்கள் இந்தியா தவிர கனடா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி போன்ற இடங்களில் அமைந்துள்ளன. இவற்றில் கனடா, அமெரிக்காவில் ஏற்கனவே
தோண்டப்பட்ட சுரங்கங்களிலும், ஜப்பான், இத்தாலியில் பாலை மற்றும் மனித நடமாட்டமற்ற வனப்பகுதிகளிலும் பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு பூமிக்கடியில் குறைந்த பட்சம் 1.5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால் தான் இந்த நியூட்ரினோ துகளை ஓரளவிற்காவது கண்டறிய முடியும் என்பதே அறிவியல் உண்மை.
இந்த ஆய்வரங்கம் அமைவதில் மக்களுக்கு என்ன இடர்ப்பாடு ஏற்படும் என்பதை அறிய, அதன் கட்டுமானத் திட்டத்தை ஒருமுறை நாம் உற்று நோக்கினால் போதுமானது.
சுரங்கத்தின் விட்டம் - 20 அடி முதல் 100 அடி வரை
சுரங்கத்தின் நீளம் - 2 கிலோ மீட்டர்
அறிவியல் கருவிகள் எடை - 50,000 டன் இரும்பு, மின் காந்தம்
( உலகில் உள்ள மின்காந்த ஏற்பிகளில் இதுவே மிகப் பெரியதும் எடை அதிகமானதும் ஆகும் )
வெட்டி எடுக்கப்படும் பாறைகளின் அளவு - 2,25,000 கன மீட்டர், 750,000 கன அடி
தேவைப்படும் நீர் - 350,000 காலன்கள்
மின்சாரத் தேவை - அறிவிக்கப்படவில்லை.
இக் கட்டுமானத்திற்கு தேவையான சிமிண்ட், மணல் தேவை சுமார் - 37,000 டன்
இந்த ஆய்வகத்திற்கான நீர்த் தேவை 30 கி.மீ தள்ளியுள்ள சுருளி ஆற்றிலிருந்து எடுத்து நிறைவு செய்யப்படும்.
இவை போக இந்தக் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக சுமார் 160 கனரக வாகனங்கள் ச மீபத்திய ரயில் நிலையத்திலிருந்து தேவாரம் நகருக்குள் தினசரி வந்து போக வேண்டும். வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் நீண்ட நாள் அடிப்படையில் இந்தப் பகுதியை விட்டு வெளியேற்றப்படும். அதுவரை இப்பகுதியி லேயே அவை இருக்கும்.
STEEL
Length - 48 m
Width - 16 m
Height - 11.9 m
Plate thickness - 6 cm
No. of plates - 140
Weight of steel - 51,000 Ton
COIL
Coil dimension - 3 cm to 800 cm
Coil height - 14 m
Coil weight - 282 Ton
Amp-turns - 82,500
No. of turns - 1 to 1200
Current - 69 A
Power dissipation - 6.9 kW
Stored magnetic energy - 2.5 MJ
ஆய்வுக் கூடத்தின் உள்ளே கதிரியக்கம் உருவாக்கக் கூடிய தனிமங்கள் ஏதும் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஹீலியம், ஆர்கான் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயமான வாயுக்கள் பயன்படுத்தப்படும்.
இவை தான் அந்த ஆய்வகத்தின் கட்டுமானத் திட்டம்.
பக்கத்து வீட்டில் 6 இன்ச் ( அரை அடி ) போர் போடப்படும் போது ஏற்படும் அதிர்வால் நம்மால் தூங்கமுடிவதில்லை என்பது நடைமுறை. ஆனால் இத்தகைய பெரிய கட்டுமானத்தால் எந்தவித சுற்றுச்சூழல் மாசுபடுதலோ, இடர்ப்பாடுகளோ அப்பகுதி மக்களுக்கு ஏற்படாது என்று அடித்துச் சொல்கிறார்கள் அறிவியலாளர்கள்.
சரி. இந்த ஆய்வகம் அந்தப் பகுதியல் அமைவதால் மக்களுக்கு ஏதேனும் பயன் கிடைக்குமா என்ற கேள்விக்கும் அவர்களே பதில் தருகிறார்கள்.
மொத்தமே 20 முதல் 200 வரையிலான பேர்க ள் அங்கு வேலை செய்வதால் அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்காது. வேண்டுமானால் கட்டுமானப் பணிக்கான கூலிகளாக முதல் நான்கு ஆண்டுகளுக்கு சிலருக்கு வேலை கிடைக்கலாம்.
நூற்றுப் பத்து ஆண்டுகளாக இருக்கும் முல்லைப்பெரியாறு அணை பூகம்பம் வந்து இடியும் என்று கேரளம் வாதாடிக் கொண்டிருக்க இச் சுரங்கம் அமையும் பகுதியில் பூகம்பம் ஏற்படாது என்று ஐ என் ஒ குழு அடித்துச் சொல்கிறது. இவ்வளவு பெரிய சுரங்கத் துளை அமைப்பதால் என்னென்ன இடர்கள் ஏற்படும் என்ற கேள்வி நமக்கும் எழுகிறது.
ஏற்கனவே நீலகிரிப் பகுதியில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஆய்வுக் கூடம் அமைப்பதை எதிர்த்ததின் காரணங்கள் அப்படியே தேவாரம் பகுதிக்கும் பொருந்தும்.
நீலகிரியைப் போலவே தேவாரம் பகுதியும் வனச்செறிவான பகுதியாகும். வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், வரையாடு, காட்டுப் பன்றிகள் ஆகியவற்றின் உயிர்ச் சுழற்சி இதனால் பாதிக்கப்படும்.
காட்டு வளங்கள், மூலிகை வளங்கள், ஏல விவசாயம், அவற்றிற்கான நீராதாரங்கள் ஆகியவை பாதிப்பிற்குள்ளாகும்.
ஆய்வுக்கூடம் அணு ஆய்வகமாக இருப்பதால் பாதுகாப்பிற்காக இராணுவ மயமாக்கப்பட்டு, மக்களின் சுதந்திர நடமாட்டம் முடக்கப்பட்டு அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை முடமாக்கப்படும்.
இந்த ஆய்வுப்பணி வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் மேலும் 4 முதல் 5 கி. மீ இந்தச் சுரங்கம் ஆழப்படுத்தப்படலாம். அதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளையும் மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும்.
மனித குலத்திற்கு இதுவரை எந்தப் பயனும் தராத, இந்த ஆய்வுப்பணி, தற்போது இந்தியா எதிர் நோக்கியுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளின் மத்தியில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடை பெறுவதாக அறிகிறோம். 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுடன் வறுமைக் கோட்டிற்குக் கீழே துன்புறும் ஒரு நாட்டில் இத்தகைய “தெரியாத ஊருக்குப் போகாத பாதை” அவசியமா என்பது
சிந்திக்கத்தக்கது.
மேலும் உள்ளூர்வாசிகளுக்கு எந்தப் பயனும் அளிக்காத ஒரு திட்டத்திற்காக இவ்வளவு இடர்ப்பாடுகளை மக்கள் ஏன் தாங்க வேண்டும் என்ற கேள்வியும் நம் முன் எழுகிறது.
காவிரிப் பிரச்சனையைக் கண்டு கொள்ளாத,
சேதுசமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போட்ட
ஈழத்தமிழரை எதிரியாய் நடத்திய
மலட்டுக் கத்திரிக்காயை விவசாயிகள் தலையில் கட்ட துடிக்கிற
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கத் துணியாத
முல்லைபெரியாரில் துரோகத்திற்கு துணை போகிற
மீன் வளத்தை முதலாளிகளுக்கு விற்கத் துடிக்கின்ற
நாட்டையே சுரண்டல் முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பங்கு போடத் துடிக்கும்
ஒரு அரசு இந்த நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தில் காட்டும் ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த ஆராய்ச்சிiaTATA Institute of Fundemental reserch (TIFR), பாபா அணு ஆராய்ச்சி நிலையம், IIMSC சென்னை, ஐஐ டி மும்பை, இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையம், கல்பாக்கம் உட்பட 7 முதல் நிலை நிறுவனங்கள் மற்றும் 13 பங்கு நிறுவனங்கள் நடத்த உள்ளன. குளிரூட்டப்பட்ட அறையில் கணிணி முன் அமர்ந்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் விவாதம் செய்யும் அந்த அறிவாளிகளுக்கு தேவாரம் மலையில் ஆடு, மாடு மேய்த்து வயிற்றைக்
கழுவிக் கொண்டிருக்கும் வறிய படிக்காத அப்பாவிகளின் வாழ்க்கையின் வலி எப்படிப் புரியும்.
மக்களுக்கு துன்பங்களை மட்டுமே திட்டமிடும் ஒரு அரசு எப்படி அல்லது இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மக்களின் அரசாக இருக்க முடியும்.
அறிவியலின் எதிர் வினைகளை ஏற்கனவே இரஷ்யாவின் செர்னோபில் அணு உலையிலும், போபாலில் விஷவாயு விபத்திலும் ஜப்பான் ஹிரோசிமா, நாகசாகியிலும் நாம் போதுமான அளவு பார்த்தாகி விட்டது.
அறிவாளிகள் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் துயர்களை வாழ்வில் எதிர் கொள்ளப் போவது அப்பாவிகள் தான்.
நம் கடமை அந்த அறிவாளிகளின் பிடியிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவது மட்டுமே.
ஏனெனில் அறிவாளிகளுக்கோ இது இன்னுமொரு ஆராய்ச்சி.
ஆனால் அப்பாவி மக்களுக்கோ இது தான் வாழ்க்கை. இங்கு தான் வாழ்க்கை.
2 responses to “அறிவாளிகளும் – அப்பாவிகளும் சு.தளபதி, மதுரை.”
Pappu
06:25 இல் ஆகஸ்ட் 1st, 2010
Hai Uncle,
Your Neutrino Article is Really Super…… (Not only Neutrino Article all are super), each and every
people should know about this for prevent our country from any natural disaster as well as poor
and uneducated people, wild animals, and historical places….
Actually, educated people only can understand about this Neutrino Article, so it is not easy to convey rural side and uneducated people, so hereafter you try to write your words in simple language…… which is liable for uneducated and as well as educated one….. then only you can achieve your goal and target……
You try to prepare notice for வருவார்கள் அவர்கள்! article and issue it during the election time… it
will give good response and chances to select good one……
by,
Pappu,
S.T.Gurusamy
10:19 இல் December 30th, 2011
தங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை. மிக நல்ல பதிவு. தொடரட்டும் தங்கள் பணி. வாழ்த்துக்கள்!